Chennai Rain | சென்னை மழை வெள்ளத்திற்கு பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம்...ரிப்பன் மாளிகையில் சோதனை!
வெள்ளத்தின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்டவற்றை விரைவாக கொண்டு சேர்க்கும் வகையில் டிரோன்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. கொசு ஒழிப்பு மருந்துகளை தெளிப்பதற்கு டிரோன்களை பயன்படுத்திய சென்னை மாநகராட்சி நிர்வாகம், கால்வாயில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணித்தது.
இதேபோல மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள சொத்துகளை டிரோன்கள் மூலம் கண்டறிந்து, முறையான சொத்து வரியையும் வசூலிக்க திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, தனியே தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கவும் டிரோன்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்காக 3 நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்து 10 டிரோன்களை வாடகைக்கு எடுத்துள்ளது. இந்த டிரோன்களை இயக்குவது தொடர்பான ஒத்திகை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. 10 கிலோ எடையை தூக்கிச் செல்லக்கூடிய இந்த டிரோன்களை 2 கிலோ மீட்டர் தூரம் வரை இயக்கலாம் என மாநகராட்சி செயற்பொறியாளர் உமா தெரிவித்தார்.
உணவு மட்டுமன்றி, மருந்துகள் தண்ணீரையும் டிரோன்கள் மூலம் செல்ல முடியும். அவசர காலங்களில், வழக்கமாக ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு வழங்கப்படும் நிலையில், குறுகிய இடங்களில் வசிப்போரை சென்றடைய முடியாத நிலை இருந்தது. மேலும் உயரமான இடங்களில் இருந்து உணவுகளை விநியோகிக்கும் போது அவை கீழே விழுந்து சேதமடையவும் வாய்ப்புகள் இருந்தன. இவைகளை கவனத்தில் கொண்டே உணவு விநியோகத்திற்கு டிரோன்களை பயன்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.